அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, June 22, 2011

விவாகரத்து (தலாக்) விதிமுறைகள்

ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும்.
1.       விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன் புறுத்துவான்; பராமரிக்கவும் மாட்டான்.

2.       அல்லது விவாகரத்துப் பெறுவதற் காக நடத்தை கெட்டவள் என்று மனைவி யின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.

3.       அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற் கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான்.


விவாகரத்தை அனுமதிக்காத போதும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருக்கும் போதும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.

ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிர், உடமை,மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் எளிதாக்கியிருக்கிறது.
விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருக்கும் அதே சமயம் "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.

அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.

அதுவும் பயன் தராத போது அடித்துத் திருத்த வேண்டும் என்று திருக்குர்ஆன் 4:34 வசனம் கூறுகிறது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.

இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாத்தை ஏற்றவர்களை விட, அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத் தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆண் வலிமை உள்ளவனாகவும், பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு பாது காவலரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்று தான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.

"இலேசாக அடியுங்கள்'' என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும். இதனால் தான் மனைவியரைத் துன்புறுத்துவது மற்றவர்களை விட குறைவாகவே முஸ்லிம்களிடம் இருக்கிறது.

இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக் குர்ஆன் 4:35 வசனம் வழிகாட்டுகிறது.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

விவாகரத்துச் செய்யும் முறை
"உன்னை விவாகரத்துச் செய்கிறேன்'' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடும் என்று கருதிவிடக் கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (திருக்குர்ஆன் 65:4)

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழி முறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளவும் செய்யலாம். அந்தக் காலக் கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக் கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.

மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.

ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்து விட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ (2:229)
(திரும்பவும் அழைத்துக் கொள்ளத் தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான்'' (2:229) என்ற இறை வசனத்திலிருந்து இதை அறியலாம்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 2691)

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

இதில் இன்னொன்றையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும் சிலர் இரேண்டுமுறை தலாக் சொல்லவேண்டும் என்கின்ற ஒரு கருத்தை வைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் இங்கே தெளிவான வார்த்தியைக் கொண்டு கூறுகிறான் திரும்பவும் அழைத்துக்கொள்ள தக்க தலாக் இரண்டு தடவைதான் இங்கே தடவை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.

ஒருவர் தலாக் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகியும் மீண்டும் சேர விரும்பவில்லை என்றால் அந்த முதல் தலாக்கே அவர்களுக்கு போதுமானது மூன்று மாதங்கள் கழித்து இன்னொருமுறை தலாக் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. 


பெண்களின் விவாகரத்து உரிமை
விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ,நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக் கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்ப மில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவ ரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள். (நூல்கள்: புகாரி 5273, 5275, 5277, நஸயீ 3409)
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி லிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து அவள் பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும், திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியம். ஏனெனில் பெண்கள் கணவர்களிட மிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின் அதிகச் சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப் படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.

திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
"அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே'' (4:21) என்றும்
"கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவி யருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' (2:228) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

விஷம் கொடுத்துக் கணவரைக் கொல்கிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்கின்றனர். கணவனிட மிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாக ரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 2:228-232)
இது பற்றி மேலும் விபரம் அறிய 386வது குறிப்பைக் காண்க!

விவாகரத்துக்குஇரண்டுசாட்சிகள்

விவாகரத்துச் செய்யும் உரிமையை இறைவன் ஏன் வழங்கினான் என்பதை யும் அதற்கான ஒழுங்குகளையும் 66வது குறிப்பில் காண்க!

இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக் குரிய மற்றொரு முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாக ரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை.
தொலைபேசியில் விவாகரத்து, தபால் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும், அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம். தபாலில் எழுதுவதற்கும், தொலை பேசியில் பேசுவதற்கும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று இதைச் சிலர் விளங்கிக்கொள்கின்றனர்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும், இருவருக் கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.
எனவே எதிர் தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதை யும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.
ஒரு திரையில், தலாக் சொல்பவனை யும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுய நினைவுடன் அதைச் சொல்கிறார் களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இதுவும் செல்லத்தக்கதல்ல. எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேர்மை யான இரு சாட்சிகளுக்கு முன் சொல்வது தான் தலாக்கின் சரியான வழிமுறையாகும்.
எனவே இந்த விதியைக் கவனத்தில் கொண்டால் அவசரப்பட்டுச் செய்யும் பல விவாகரத்துக்கள் தவிர்க்கப்படும்.
மேலும் விரிவாக வீடியோவில் காண இங்கே க்ளிக் செய்யவும்
நன்றி:ஆன்லைன்பிஜே 


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y